கோவை: அமித்ஷாவை சந்தித்தது தேர்தல் கூட்டணிக்காக இல்லை என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்களுடன் திடீரென நேற்று டெல்லி சென்றார். அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் பேசுவதற்கு வந்திருக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு, டெல்லியில் கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க அலுவலகத்தை பார்க்கவே வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, திடீரென நேற்று இரவு 8 மணிக்கு மத்திய அமைச்சர் அமித்ஷாவை தனது குழுவினருடன் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது. சந்திப்பின் போது அமித்ஷா-இ.பி.எஸ் இருவரும் தனியாக 15 நிமிடங்கள் பேசியதாகவும் தகவல் வெளியானது.
Advertisement

இந்த நிலையில், இ.பி.எஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்கூறியதாவது:
தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் தாமதம், மேகதாது அணை விவகாரம், இருமொழிக்கொள்கை, தொகுதி மறுவரை என்று பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அதைப்பற்றியே அமித்ஷாவிடம் பேசினோம். தமிழகத்திற்கான நிதியை விடுவிக்க வலியுறுத்தினோம்.
தமிழகத்தில் நடைபெற்ற டாஸ்மாக் முறைகேடு குறித்தும் பேசினோம். கூட்டணி குறித்து பேசவில்லை. தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி அமைப்பார்கள். அதற்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. விறுவிறுப்பான செய்திக்காக ஊடகங்கள் தான் கூட்டணி என்று செய்தி வெளியிடுகின்றனர்.
நாங்கள் முழுக்கமுழுக்க மக்கள் பிரச்சனையை பேசவே வந்தோம். கூட்டணி வேறு கொள்கை வேறு. அ.தி.மு.க.வின் கொள்கை எப்போதும் நிலையானது. தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அங்கேயே இருக்கப்போகிறார்களா? அதனால் இது இப்போதுதேவையற்றது
இவ்வாறு இ.பி.எஸ். தெரிவித்தார்.