கோவை: போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு மோடி ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை பொது கணக்குகள் குழுவின் ஆய்வுக்கூட்டம் அதன் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகள், அலுலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்வ பெருந்தகை, ஆய்வு கூட்டத்தில் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அரசியல் குறித்து தனியாக பேட்டியளித்த அவர், இந்தியா-பாகிஸ்தான் போர் தொடர்பாக வெளிநாடுகள் தலையீடு இல்லை எனக் கூறுவதற்கு பிரதமருக்கு என்ன தயக்கம்? என கேள்வி எழுப்பினார். ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் வினவினார்.
எங்கள் நாட்டில் தலையிடுவதற்கு நீங்கள் யார் என ஏன் கேட்கவில்லை? என்றும் வாஜ்பாய் இந்திரா காந்தி ஆகியோர் முந்தைய காலங்களில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.
அமெரிக்கா அதிபருக்கும் இந்த போர் நிறுத்தத்திற்கும் சம்பந்தமில்லை என ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்? என்றும் ராகுல் காந்தி கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக அவர் பதில் கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சசிதரூர் பேச்சு தொடர்பான கேள்விக்கு தொடர்ச்சியாக கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக பேசி வருகிறார் என்றும் காங்கிரஸ் எம்பி யாக அவர் பேசியது தவறு தான் என்றும் கூறினார். ஆணவ படுகொலைகளுக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும் என தொடர்ச்சியாக காங்கிரசும் வலியுறுத்தி வருகிறது என கூறிய அவர் 2014 ஆம் ஆண்டே இது தொடர்பாக வலியுறுத்தி வந்தோம், என்றும் பாஜக இதனை சட்டமாக ஏன் நிறைவேற்றவில்லை என்றார்.
விசாரணை செல்பவர்கள் உயிரிழப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த செல்வ பெருந்தகை,நம் உயிர்கள் எந்த விதத்திலும் சேதாரம் ஆகக் கூடாது, கூடாது.முதல்வர் நேர்மையாக அரசியல் செய்கிறார் அவருக்கு எந்த ஒரு குந்தகமும் காவல்துறை விளைவிக்கக்கூடாது என்றார்.
மேலும் ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் ஏற்ற வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம், அதனை விரைவில் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.