கோவை: கோவையில் குழந்தை திருமணம் செய்து வைத்தவர்களைக் கைது செய்யக்கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தொண்டாமுத்தூர் வள்ளிமலப்பட்டிணத்தை அடுத்த விராலியூர் கிராமத்தில் 14 வயது சிறுமிக்குக் குழந்தை திருமணம் செய்து வைத்தவர்களைக் கைது செய்யக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியைச் சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்டவரின் 14 வயது மகளுக்கு, 28 வயதான ராமகிருஷ்ணன் என்பவருடன் கடந்த 14ம் தேதி குழந்தை திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தை எங்கள் பகுதியில் வசிக்கும், பிரகாஷ் மற்றும் சிவரஞ்சினி, சங்கீதா ஆகியோர் தான் நடத்தி வைத்தனர். இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்குப் புகார் அளித்துள்ளோம். அதன் பேரில் ராமகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பிரகாஷ் மற்றும் சிவரஞ்சினி ஆகியோர் தலைமறைவான நிலையில் அவரது உறவினர்கள், போலீசுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டதாகவும், தங்களை எதுவும் செய்ய முடியாது என்று கூறி மிரட்டி வருகின்றனர்.
எனவே தலைமறைவாக உள்ள மூவரையும் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.