கோவை: கோவையில் வெவ்வேறு விபத்தில் வாலிபர்கள் உட்பட 3 பேர் பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (21). இவர் தனது பைக்கில் கோவை அத்திப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். சின்ன வேடம்பட்டி அருகே வந்த போது ஸ்ரீதர் திடீரென தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரது எதிரே வந்த டிப்பர் லாரி அவர் மீது ஏறி இறங்கியது.
இதில் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டு இருந்த ஸ்ரீதரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தன் (78). இவர் தனது எலக்ட்ரீக் ஸ்கூட்டரில் சக்தி ரோடு விஸ்வாசபுரம் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது பின்னால் வந்த பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கோவிந்தன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டகோவிந்தன் பலத்த காயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இரு விபத்து குறித்தும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார் (37). அவர் தனது ஸ்கூட்டரில் போத்தனூரில் இருந்த செட்டிப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது எதிரே வந்த பைக் திடீரென சரவணக்குமார் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த சரவணக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.