கோவை: சூலூரில் இருந்து சென்ற சாகசம் செய்த தேஜஸ் விமானம் விபத்தில் சிக்கியதில் விமானி உயிரிழந்த நிலையில், சூலூர் விமானப்படை தளத்தில் அவரது உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஞ்சலி செலுத்தினர்.
துபாயில் விமான கண்காட்சியில் நடைபெற்று வருகிறது. இந்தியா உட்பட 115 நாடுகளைச் சேர்ந்த விமானப்படைகள் மற்றும் நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. நேற்று முன்தினம் பிற்பகல் 2.10 மணி அளவில் விமான சாகச கண்காட்சி நடைபெற்றது.
இதில் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சென்ற தேஜஸ் எம்.கே 1 இலகு ரக போர் விமானத்தில் விமானி நமன்சியால் (37 வயது) பறந்து சென்று சாகசம் செய்தார். அப்போது அந்த விமானம் திடீரென வானில் இருந்து தரையை நோக்கி வந்து விழுந்து தீப்பிடித்து எறிந்தது. இதில் விமானி நமன்சியால் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளான காட்சிகள்
துபாயில் விழுந்து நொறுங்கியது இந்திய போர் விமானம் தேஜஸ்.#dubai #dubaiairshow #tejasfighterjet #jetcrashed #news #viralvideo #trendingnews #newscloudstamilnadu pic.twitter.com/r0JhfxasIc
— News Clouds Coimbatore (@newscloudscbe) November 21, 2025
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சூலூர் விமானப்படை தளத்தில் நமன்சியால் கமாண்டராக பணியாற்றி வந்தார். விபத்து நடந்த விமானத்தை கண்காட்சியில் இடம்பெறுவதற்காக கோவையில் இருந்து துபாய் வரை அவர் இயக்கியதாக தெரிகிறது. அவரது உயிரிழப்பால் சூலூர் விமானப்படை தளம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
சூலூர் விமானப்படை குடியிருப்பில் நமன்சியால் தனது மனைவி மற்றும் ஏழு வயது குழந்தையுடன் வசித்து வந்தார். அவருடைய மனைவியும் விமானப்படை அதிகாரி தான். தற்பொழுது விமானப்படை தொடர்பாக மேற்படிப்பு படித்து வருகிறார். 7 வயது பெண் குழந்தை இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாள்.
இதனிடையே சூலூர் விமானப்படைத்தளத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் விமானப்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

