கோவை: நவீன தொழில் நுட்பங்கள் மூலம் வழக்குகள் தேங்குவதை குறைக்கலாம் என்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேசினார்.
சாய்பாபா காலனி அருகே உள்ள தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
இந்திய அரசியலமைப்பின் 75 வது ஆண்டில் நாம் பேசும்போது, நிறுவனங்கள் மற்றும் கோட்பாடுகள் பற்றி மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கையில் நாட்டின் லட்சியங்களை, அர்த்தமுள்ளதாக்கும் மதிப்புகள், மனநிலைகள் மற்றும் குடிமைப் பழக்கவழக்கங்கள் பற்றியும் பேச வேண்டும்.
குடியுரிமை, சட்ட அந்தஸ்துக்கு அப்பால் சென்று ஒருவருக்கொருவர் நமது உறவையும், குடிமை நல்லொழுக்கத்தையும் வரையறுக்க வேண்டும். குடிமக்கள் தனிப்பட்ட நன்மைக்காக அல்லாமல் பொது நன்மைக்காக செயல்பட உதவும் தார்மீக அர்ப்பணிப்பு அவசியம்.
கொரோனா காலத்தில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அப்போது உச்ச நீதிமன்ற தாமாக முன் வந்து வழக்கு விசாரணை நடத்தி மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசியை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
தற்போது ஏஐ போன்ற நவீன தொழில் நுட்பங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. நீதிமன்றங்களில் நவீன தொழில் நுட்பங்களை கையாளுவது மூலம் வழக்குகள் தேங்குவதை குறைக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.


