கோவை: காசி தமிழ் சங்கமம் நான்காம் ஆண்டு நிகழ்வை முன்னிட்டு கோவையில் இருந்து ரயில்சேவை துவங்கியது.
தமிழகத்துக்கும், உத்தர பிரதேசத்தின் புகழ்பெற்ற ஆன்மிக நகரமான காசிக்கும் (வாரணாசி) இடையேயான தொன்மை வாய்ந்த நாகரிக மற்றும் கலாசாரத் தொடா்பைப் போற்றும் ‘காசி தமிழ் சங்கமத்தின்’ 4-ஆம் ஆண்டு நிகழ்வு தொடங்கியுள்ளது.
இதனையொட்டி, சென்னை, கோவை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இருந்து காசிக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இணையதளத்தில் பதிவு செய்த ஏராளமானோர் பயணிக்கின்றனர்.

அந்த வகையில், கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காசிக்கு இன்று மாலை 6 மணி அளவில் ரயில் புறப்பட்டது.
இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 64 பேர் காசிக்கு பயணத்தை துவங்கியுள்ளனர்.
ஆன்மீகவாதிகள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், விவசாயிகள், ஐடி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் என பல தரப்பினரும் இதில் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரயில் டிசம்பர் 5ஆம் தேதி இரவு 9.30 மணி அளவில் பனாரஸ் நகரை சென்றடையுள்ளது.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டுள்ள பயணிகள் இந்த நிகழ்ச்சிக்காக பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டதோடு, பாரம்பரியமிக்க கலாச்சார மற்றும் ஆன்மீக தொடர்பை வலுப்படுத்தும் நிகழ்ச்சியாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி திகழ்ந்து வருவதாக குறிப்பிட்டனர்.


