கோவை: கோவையில் போதையில் இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவரை கொடூரமாகத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வை கணபதியில் உள்ள பாரதி நகர் பகுதியில் கடந்த செவ்வாயன்று இரவு போதை கும்பல்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு முற்றிய நிலையில், ஒருவருக்கொருவர் கற்களால் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர்.
இதில் வெற்றி என்ற இளைஞர் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி கீழே விழுந்தார்.
வெற்றி மயக்கமடைந்த நிலையிலும், ஆத்திரம் தீராத அந்தப் போதைக் கும்பல் அவர் மீது பெரிய கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்ய முயன்றனர். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை விரட்டியடித்தனர். பின்னர் உயிருக்குப் போராடிய வெற்றியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளைஞர்களுக்கிடையே நடந்த இந்த பயங்கர மோதலை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தாக்குதலில் ஈடுபட்டுத் தலைமறைவான இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.
கோவையில் கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


விடியல் அரசின் மிகப்பெரிய சாதனை போதைப்பழக்கத்தை சிறுவர்கள், இளைஞர்களிடம் கொண்டு வந்தது..இந்த கேடுகெட்ட திமுக அரசை தூக்கி எறியாவிட்டால் தமிழகம் அதலபாதாளத்திற்கு சென்று விடும்