கோவை: தெருநாய்களுக்கு கருத்தடை செய்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் விதமாக கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் களத்தில் இறங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
கோவையைச் சேர்ந்தவர்கள் அம்ரிதா ரமேஷ மற்றும் அத்வைத் ராவ். டிப்ஸ் குளோபல் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் இவர்கள் செல்லப்பிராணிகளை பராமரிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.
ஏற்கனவே தெருநாய்களை பராமரித்தல், அவற்றிற்கு உணவளித்தல் போன்ற சேவைகளில் ஈடுபட்டு வந்த இருவரும், அதிகரித்து வரும் தெருநாய் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, அதற்கு தீர்வு காண முடிவு செய்துள்ளனர்.
இதற்காக சிக்கு (Chikoo) என்ற அமைப்பைத் தொடங்கியுள்ள மாணவர்கள் HAS மற்றும் The Pawsome People Project ஆகிய தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகளைத் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களுடன் மேலும் சில பள்ளி மாணவர்களும் இணைந்து இப்பணியை மேற்கொள்கின்றனர்.
மாணவர்கள் முன்னெடுப்பு
இதுகுறித்து மாணவி அம்ரிதா ரமேஷ் மற்றும் மாணவர் அத்வைத் ராவ் ஆகியோர் News Clouds Coimbatore-இடம் கூறியதாவது:-

சிறு வயதில் இருந்தே எங்களுக்கு நாய்களை பராமரிப்பதில் ஆர்வம் உள்ளது. ஆதரவற்ற நாய்களுக்கு சில உதவிகளையும் செய்து வந்தோம். இதனிடையே நாய்களுக்கு கருத்தடை செய்ய முடிவெடுத்தோம். இதற்காக பல்வேறு தனி நபர் மற்றும் அமைப்புகளின் உதவியை நாடி ரூ.5 லட்சம் நிதி திரட்டியுள்ளோம்.
மேலும், ரோட்டரி, HAS மற்றும் The Pawsome People Project அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் தெருநாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளும் பணியை தொடங்கியுள்ளோம்.
முதற்கட்டமாக 5 மாதங்களுக்குள்ளாக 200 நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளப்பட உள்ளது. இன்று வெள்ளானைப்பட்டியில் மட்டும் 4 நாய்களுக்கு கருத்தடை செய்துள்ளோம். ஆண்டுக்கு 500 நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்பது எங்கள் இலக்கு.
பாராட்டுகள்
எங்களுடன் நண்பர்களும், தன்னார்வலர்களும் இணைந்து வருகின்றனர். இதனை நல்ல முறையில் மேற்கொள்வோம் என்று தெரிவித்தனர்.
கோவை மாநகரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் பெருகி, இதனால் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களின் இந்த முன்னெடுப்பு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

