கோவை: நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்பட இசை வெளியீட்டு விழா கோவையில் விமர்சையாக நடைபெற்றது.
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த படக்குழுவினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் திரைப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி, “இந்தப் படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்புவார்கள். கோவை நேர்மறை எண்ணங்கள் நிறைந்த நகரம் என்பதால், இசை வெளியீட்டு நிகழ்ச்சியை இங்கிருந்து தொடங்கியுள்ளோம். நடிகர் சூர்யா இதுபோன்ற குடும்பக் கதைக்களத்தில் நடித்துப் பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்தப் படம் சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது. இது வெறும் காதல் படம் மட்டுமல்ல; குடும்ப உறவுகள், பாசம் மற்றும் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட திரைப்படம்” என்றார்.
நடிகர் சுனில் ரெட்டி பேசுகையில், “இது முழுமையான குடும்பப் படம். இதில் உணர்வுப்பூர்வமான காட்சிகளும், நகைச்சுவையும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மிக அருமையாக இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் எனக்கு மிகவும் இதயத்திற்கு நெருக்கமான படமாகும்” என்றார்.
நடிகை மமிதா பைஜூ, “இந்தப் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது” என்று தெரிவித்தார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசுகையில், “முதல்முறையாக இதுபோன்ற குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளேன். என்னால் முடிந்த சிறந்த இசையை வழங்கியுள்ளேன். படம் தொடர்ந்து பார்க்கத் தூண்டும் வகையில் அமையும். தற்போது பின்னணி இசைப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் படக்குழுவினரை வரவேற்றதுடன், திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினர்.





