கோவை: கோவை பேரூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மகள் ஆகிய 3 பேர் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டதாக கூறப்படும் சம்பவத்தில், 15 வயது சிறுமி உயிரிழந்தார். அவரது தந்தை மற்றும் 17 வயது சகோதரர் ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து பேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆறுமுககவுண்டனூர், ஸ்ரீ வாணி கார்டன் பகுதியில் பாலகிருஷ்ணன் (54), அவரது மனைவி பொற்செல்வி மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.
பாலகிருஷ்ணனின் மகள் ஹரிதா (15) கடந்த இரண்டரை ஆண்டுகளாக மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக கோமா நிலையில் இருந்து வந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருக்கு வீட்டிலேயே தொடர்ந்து சிகிச்சை மற்றும் பராமரிப்பு அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மகளை கவனித்துக் கொள்வதற்காக பாலகிருஷ்ணன் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்பு தினத்தந்தி அலுவலகத்தில் பணியாற்றி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவரது மகன் ரிதிஷ் (17) 12ஆம் வகுப்பு படிப்பை முடித்த நிலையில், இதுவரை கல்லூரியில் சேரவில்லை. பாலகிருஷ்ணனின் மனைவி தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று (செப்.19) தாய் வழக்கம்போல் பணிக்காக பல்கலைக்கழகத்துக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் பாலகிருஷ்ணன், ரிதிஷ் மற்றும் ஹரிதா ஆகிய 3 பேர் மட்டும் இருந்துள்ளனர்.
அப்போது 3 பேரும் தென்னை மரங்களுக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் பாலகிருஷ்ணன், அருகில் வசிக்கும் நடராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 3 பேரும் விஷம் குடித்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த நடராஜ் உடனடியாக பாலகிருஷ்ணனின் வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு 3 பேரும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்த அவர், உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து, 3 பேரையும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே 15 வயது ஹரிதா உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணன் மற்றும் ரிதிஷ் ஆகிய இருவரும் கோவை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பேரூர் போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், பாலகிருஷ்ணனின் மனைவி இருந்து புகார் பெறப்பட்டு, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3 பேரும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டதற்கான காரணம் என்ன, சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின் முழுமையான பின்னணி போலீஸ் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





