கோவை: தொண்டாமுத்தூர் அருகே சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த சிறுத்தையை பிடிக்கும் பணியை வனத்துறை முடுக்கிவிட்டுள்ளது.
தொண்டாமுத்தூரை அடுத்த குப்பேபாளையம் பகுதியில் உள்ள தோட்டம் அருகே சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. சிறுத்தை நடமாடும் CCTV கேமிரா காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
அந்த வீடியோ காட்சிகள்
இந்த நிலையில், கேமிராக்கள் மற்றும் சிறப்புக்குழு மூலம் இரவு, பகலாக சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
Advertisement

வனத்துறை
இதுகுறித்து கோவை மாவட்ட வனத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம், பேரூர் வட்டம், தொண்டாமுத்தூர் பஞ்சாயத்து, போளுவாம்பட்டி வனச்சரகம், நரசீபுரம் பிரிவு, தேவராயபுரம் சுற்றுக்குட்பட்ட குப்பேபாளையம் ஊர் வடக்கு பகுதியில், வன எல்லையை ஒட்டி இருக்கும் சக்தி என்பவரது தோட்டம் அருகில் 26ம் தேதி நள்ளிரவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றது.

இதையடுத்து, வன எல்லைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு கேமிரா பொருத்தப்பட்டு, இரவு பகலாக கண்காணிப்பும், சிறப்பு குழு அமைத்தும், வனப் பணியாளர்களால் ரோந்துப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கோவை வனச்சரகம் மற்றும் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட வன எல்லைப் பகுதிகளிலும் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இன்று வரை சிறுத்தையினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
இவ்வாறு வனத்துறை அறிவித்துள்ளது.