கோவையில் தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறிக்க முயற்சி!

கோவை: கோவையில் சாலையோரம் நின்றிருந்த தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறிக்க முயற்சி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை கே.கே புத்தூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (44). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் சாய்பாபா காலனி கோயில்மேடு பகுதியில் சாலையோரம் ஒரு மரத்தடியில் நின்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 பேர் அவரிடம் எதற்காக இங்கு நின்று கொண்டு இருக்கிறாய் என கேட்டுள்ளனர். அதற்கு விஜயகுமார் அந்த 2 பேரையும் கண்டித்து அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயகுமாரின் கழுத்தில் வைத்து பணம் கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்.

அவரின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்து அந்த 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து விஜயகுமார் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பணம் கேட்டு மிரட்டியது சாய்பாபா காலனி அண்ணா நகரைச் சேர்ந்த ரஞ்சித் (40), கோயில்மேடு வஉசி நகரைச் சேர்ந்த பெலிக்ஸ் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Recent News

Video

Join WhatsApp