கோவை: கோவை உட்பட 3 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்திருப்பதாக பொது சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து, குழந்தைகள், வயதானவர்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் குவிந்து வருவதாக கடந்த 5ம் தேதி நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனிடையே கோவை, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
சென்னையில் 12,264 பேருக்கு எடுக்கப்பட்ட மாதிரியில் 3,665 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 9,367 பேருக்கு எடுக்கப்பட்ட மாதிரியில் 1,171 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கோவை மாவட்டத்தில் 7,998 பேருக்கு எடுக்கப்பட்ட டெங்கு மாதிரியில், 1,278 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட மருந்து இயக்குனர்கள் டெங்கு பாதிப்பு பற்றி ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை மட்டும் தமிழகத்தில் 15,796 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
என்று அதிகாரிகள் கூறினர்.
கோவையில் டெங்கு
கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 7,998 சோதனைகளில் 1,278 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதாவது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 16% பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாறும் பருவ நிலை, பரவும் காய்ச்சல்… மருத்துவர் சொல்வதைக் கேளுங்கள்…
டெங்கு அறிகுறிகள்
- காய்ச்சல்
- மூச்சுத்திணறல்
- சளி/தலைவலி
- எலும்பு/மூட்டு வலி
- ரத்தக்கசிவு
- வயிற்று வலி
- வாந்தி, களைப்பு
- சிறுநீர் குறைவு
இந்த செய்தியை உங்கள் சுற்றத்தாருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே