கோவை, சூலூர் பகுதியில் 1.200 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்து ஒருவரை சிறையில் அடைத்தனர்…
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரடி மேற்பார்வையில் பல்வேறு அதிரடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் மூன்று நாட்கள் “Operation- Drug Free கோவை” என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய சுமார் 927 நபர்களின் பட்டியலானது சேகரிக்கப்பட்டு நடத்தப்பட்ட அதிரடி ரெய்டில் இதுவரை 39 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
Advertisement

அந்த பட்டியலில் மீதமுள்ள நபர்களை கண்டு அறிந்து சோதனை செய்தும் மற்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் துறையினர் போட் ஹவுஸ் அருகில் சென்று சோதனை மேற்கொண்ட போது சட்டத்திற்கு விரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த சூலூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (21) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.