கோவை: கோவை லட்சுமி மில் பகுதியில் உள்ள லுலு மாலில் கெட்டுப்போன சிக்கன் சாப்பிட்ட 2 குழந்தைகள் வாந்தி எடுத்த நிலையில், நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்ததாக வாடிக்கையாளர் புகார் தெரிவித்துள்ளார்.
கோவையில் அண்மையில் லட்சுமி மில் சந்திப்பில் திறக்கப்பட்ட பிரபல லுலு மாலுக்கு நேற்று இரவு 8 மணியளவில் சசிகுமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
அங்கு ஆஃபர் என்ற பெயரில் ரோஸ்டெட் சிக்கன், சிக்கன் சாண்ட்விச், சிக்கன் லாலிபாப் ஆகியவை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தனது இரண்டு குழந்தைகளுக்கும் அந்த சிக்கனை வாங்கிக் கொடுத்துள்ளார்.
சிக்கனை சாப்பிட்ட பிறகு பார்சலும் வாங்கி வெளியே வந்தபோது, இரண்டு குழந்தைகளும் கடுமையாக வாந்தி எடுத்துள்ளனர்.
கெட்டுப்போன சிக்கன்
இதையடுத்து சிக்கனை பார்த்தபோது, அதில் அதிகப்படியான துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த சசிகுமார், லுலு மால் நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் அலட்சியமாக பதிலளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கெட்டுப்போன சிக்கனை விற்பனை செய்து சுகாதாரக் கேடு விளைவிக்கும் லுலு மால் சிக்கன் கடை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடியோ காட்சிகள்
தற்போது, சசிகுமார் லுலு மால் நிர்வாகத்திடம் முறையிடும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஆபரில் சாப்பிடலம் என்று குழந்தைகளுடன் லுலு மாலுக்கு பொதுமக்கள் செல்லும் நிலையில், உணவுப் பாதுகாப்புத்துறையினர் தொடர் சோதனைகள் மேற்கொள்வதே இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வழி என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

