Coimbatore Breaking News: கோவையில் கல்லூரி அருகே தீயில் கருகிய நிலையில் இளம் பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
துடியலூர் வட்டமலைப்பாளையம் அருகே ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் அருகே உள்ள காலி இடத்தில் தீயில் கருகிய நிலையில் ஏதோ ஒன்று கிடப்பது போன்று தெரிந்ததால், அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர்.
அதிர்ச்சி
அப்போது தான் அது ஒரு பெண்ணின் உடல் என்பதும், தீயில் முழுவதுமாகக் கருகிக் கிடந்ததும் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது, அது 23 முதல் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் என்பது தெரியவந்தது.
முற்றிலும் அடையாளம் தெரியாத நிலையில் கிடந்த அந்த பெண்ணின் உடலை மீட்ட போலீசார், அந்த உடலை பிரேதப் பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், “எரிந்து கிடந்த பெண்ணிற்கு சுமார் 25 வயது இருக்கலாம். அவர் சிவப்பு கலர் உடை அணிந்து உள்ளார். இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.” என்றனர்.
கோவையில் பொறியியல் கல்லூரி அருகே எரிந்த நிலையில் இளம் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

