கோவை: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஜெம் மருத்துவமனை சார்பில் செயற்கை நுண்ணறிவு (AI) “டாக்டர் ஜெம்” விழிப்புணர்வு தளத்தை, புதிய AI தளம் மற்றும் மேற்குமண்டல ஐஜி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு கோவை ஜெம் புற்றுநோய் மையம் சார்பில், புற்றுநோயை எதிர்த்து வெற்றி பெற்ற நோயாளிகளை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மேலும், “டாக்டர் ஜெம்” (Dr.GEM) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான புற்றுநோய் அறிவுத்தளம் (Cancer Intelligence Platform) அறிமுக நிகழ்ச்சி, புதிய AI தளம் தோற்றுவிக்க உதவியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, மேற்குமண்டல ஐஜி சரவண சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு புதிய தளத்தை அறிமுகப்படுத்தினர். மேலும் கோவை மாரத்தான் பாடலை வெளியிட்டுள்ளனர்.

நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு புற்றுநோய் தொடர்பான துல்லியமான, அறிவியல் ஆதாரமுள்ள மற்றும் நம்பகமான தகவல்களை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த தளம், நோயாளிகளின் சிகிச்சை புரிதலை மேம்படுத்தி, தகவல் அறிந்த சரியான முடிவுகளை எடுக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் ஜெம் புற்றுநோய் மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரவீன் ராஜ் பேசுகையில்,
“இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் குறித்த தவறான தகவல்கள் நோயாளிகளுக்கு பெரும் சவாலாக உள்ளன. இதனை எதிர்கொள்ள, சரியான அறிவியல் அடிப்படையிலான தகவல்களை தேவையான நேரத்தில் வழங்குவதற்காக “டாக்டர் ஜெம்” உருவாக்கப்பட்டுள்ளது. இது நோயாளிகளின் நம்பிக்கையையும், சிகிச்சை குறித்த புரிதலையும் அதிகரித்து, தகவல் அறிந்த முடிவுகளை எடுக்க அவர்களுக்கு வழிவகுக்கும்” என்றார்.
ஜெம் மருத்துவமனையின் தலைவர் பழனிவேல் பேசுகையில், “புற்றுநோய் சிகிச்சை இன்று மருத்துவமனைச் சுவர்களுக்குள் மட்டுமல்ல. தொழில்நுட்பம், மனிதநேயம் மற்றும் விழிப்புணர்வு ஒன்றிணையும் போதுதான் உண்மையான மாற்றம் நிகழ்கிறது. “டாக்டர் ஜெம்” போன்ற முயற்சிகள் எதிர்கால புற்றுநோய் பராமரிப்பின் அவசியமான பகுதியாக இருக்கும்.
நம்பகமான தகவல்களுடன் கூடிய மருத்துவ சிகிச்சையை நோயாளிகள் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் முழுமையான மற்றும் கனிவுடன் கூடிய புற்றுநோய் சேவையின் உறுதிமொழி” என்றார்.

