கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் சிறையில் உள்ள 3 பேரும் குரும்பபாளையத்தில் வியாபாரியைக் கொன்றது அம்பலமாகியுள்ளது
கோவை விமான நிலையம் அருகில் கடந்த மாதம் 2ம் தேதி, இரவு காரில் காதலனுடன் பேசிக் கொண்டு இருந்த, கல்லூரி மாணவியை சிவகங்கை சேர்ந்த அண்ணன் தம்பிகளான கருப்பசாமி என்ற சதீஷ்(30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் ( 28), மற்றும் இவர்கள் உறவினரான தவசி என்ற (குணா) ஆகியோர் இருட்டான பகுதிக்கு கடந்து சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர்.
இவர்களை மறுநாள் 3ம் தேதி கோவை துடியலூர் அருகே தப்பி ஓட முயன்ற போது காலில் துப்பாக்கியால் சுட்டு தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.3 பேரும் சிறையில் இருந்த நிலையில் கடந்த மாதம் 1 நாள் போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அதன் பிறகு மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், போலீஸ் கஸ்டடியில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த மாதம் நவம்பர் 2 ஆம் தேதி காலையில் சேரபாளையம் அருகே தேவராஜ் வயது (55) என்பவரை இவர்கள் அடித்து கொலை செய்துள்ள தகவலும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குரும்பபாளையம் அருகே உள்ள மேல கவுண்டன்புதுரைசேர்ந்த தேவராஜ் சம்பவத்தன்று திடீரென மாயமானார். இது குறித்து அவரது மனைவி லட்சுமி கணவரை காணவில்லை என்று கோவில் பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து இருந்தார்.
போலீசார் தேடிய போது தேவராஜ் தலையில் பலத்த காயங்களுடன் சேராபாளையம் என்ற இடத்தில் காட்டுப் பகுதியில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கை சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கொலை
மாணவி வழக்கில் கைதான 3 பேரும் நவம்பர் 2 தேதி காலையில், செரப்பாளையம் காட்டுப்பகுதியில், நீண்ட நேரம் மது அருந்திக்கொண்டு அமர்ந்து உள்ளனர்.
அப்போது தேவராஜ் அவர்களைப் பார்த்து உள்ளார். ஆட்டு வியாபாரம் செய்து வந்த தேவராஜ் அவர்களை ஏன் இங்கு நீண்ட நேரம் அமர்ந்து இருக்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மயக்கம் அடைந்து விழுந்த அவர் யாரும் பார்க்காததால் இறந்துவிட்டார்.
அதன் பிறகு அங்கு இருந்து இரவில் கோவை விமான நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் நகருக்கு வந்து இருட்டான பகுதியில் 3 பேரும் மீண்டும் மது அருந்தி உள்ளனர்.
அன்று இரவு தான் மாணவியை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் கோவை மாவட்ட போலீசாருக்கு, மாநகர போலீசார் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த தேவராஜ் கொலை வழக்கில் 3 பேரையும் கோவில்பாளையம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.
இதற்காக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரையும் மீண்டும் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி கோவை மாவட்ட போலீசார் கோர்ட்டில் மனு செய்ய உள்ளனர்.
இந்த தகவல் மீண்டும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


