கோவை: கோவை – கேரளா எல்லையில் உள்ள வாளையார் அணைக்கு குளிக்கச் சென்ற தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களாகத் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர் ஜெரின் சஞ்சய் (21). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் ஜெரின் சஞ்சய், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து வாளையார் அணைப் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
கோவையில் சூறாவளி: சரிந்த வாழை மரங்கள்!
அங்கு அவர்கள் அணையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஜெரின் சஞ்சய் ஆழமான பகுதியில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டார்.
உடல் மீட்பு
உடன் இருந்த நண்பர்கள் அவரை மீட்க முயன்றும் பலன் அளிக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த கேரள மாநிலம் கஞ்சிகோடு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
நேற்று முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும், நீருக்கடியில் சேற்றில் சிக்கியிருந்த சஞ்சயை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், இன்று காலை ஜெரின் சஞ்சயின் உடல் தானாகவே நீரின் மேற்பரப்பில் மிதந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

