கோவை: கோவையில் சொகுசு காரில் இருந்த வெளிநாட்டு மதுபானங்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போத்தனூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், சொகுசு கார் ஒன்றில் அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக கார் ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பறக்கும் படை (FST 3) பொறுப்பாளரும், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளருமான குறிஞ்சி செல்வி தலைமையிலான குழுவினர் நஞ்சுண்டாபுரம் நாடார் உயர்நிலைப் பள்ளி அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்த போது இந்த மதுபானங்கள் இ- சிகரெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதீஸ்வரன் (29) என்பவரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பிரபல துணிக்கடை உரிமையாளரின் தனிப்பட்ட கார் ஓட்டுநர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் மற்றும் சொகுசு காருடன் ஓட்டுநர் ஜோதீஸ்வரனை போத்தனூர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில், போத்தனூர் போலிசார் சார்பில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

