கோவை: பொள்ளாச்சி அருகே அரங்கேறிய பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் லாரி மீது கார் மோதியதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பொள்ளாச்சி – பழனி தேசிய நெடுஞ்சாலையில் நல்லாம்பள்ளி பிரிவு அருகே சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது அதிவேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது. அதில் காரில் பயணம் செய்திருந்த இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என மொத்தம் ஐந்து பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோமங்கலம் காவல் நிலைய போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான வாகனத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
முதல் கட்ட போலீஸ் விசாரணையில், உயிரிழந்தவர்களில் நான்கு பேர் கோவை மாவட்டம் மதுக்கரை அருகே குருபம்பாளையத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் கனகராஜ், அவரது மனைவி நர்மதா மற்றும் அவர்களது இரு மகள்கள் ஆர்த்தி, பூரணி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த ஐந்தாவது நபர் காரை ஓட்டி வந்த ஓட்டுநரா அல்லது உறவினரா நண்பரா என்பது குறித்து கோமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்திற்கான காரணம் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.





