கோவை: பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த மூதாட்டிக்கு கோவை கலெக்டர் மற்றும் பத்திரிகையாளர்கள் உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
கோவை, சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி (வயது 79) என்ற மூதாட்டி. இவரது மகன் லாரி ஓட்டுநராக இருந்தபோது சேமித்து வைத்து இருந்த ரூ.15,000 மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை, அவரது மரணத்திற்குப் பிறகு கண்டெடுத்துள்ளார்.
இந்த பணத்தை வங்கியில் மாற்ற முயன்ற அவர், பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் பயனின்றி திரும்பி உள்ளார்.
இதனிடையே இன்று ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டி, “இந்த நோட்டுகளில் தேசத் தந்தை காந்தியின் படம் இருக்கிறது. மாலையாகப் போடுவேன். தீயிட்டுக் கொளுத்த மாட்டேன். இதனை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொடுக்க வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த செய்தியை நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் செய்தித்தளம் உடனடியாக பதிவு செய்து அதிகாரிகளிடமும் பகிர்ந்தது.
இந்த நிலையில், மூதாட்டியின் பணத்திலிருந்து ரூ.10,000 மாற்றிக் கொடுக்க முன்னோடி வங்கிக்கு உத்தரவிட்டார். மேலும், அருகிலிருந்த பத்திரிகையாளர்களும் மூதாட்டிக்கு ரூ.3,000 கொடுத்து, உதவினர்.
இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.