கோவை: மருதமலை கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக பேருந்து, வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக இன்று (30ம் தேதி) முதல் 2ம் தேதி வரை 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர போலீசார் கூறியதாவது:-
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக இன்று (30ம் தேதி) காலை 8 மணி முதல் 2ம் தேதி இரவு 12 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி லாலி ரோடு ரவுண்டாணாவில் இருந்து தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி, பி.என்.புதூர், முல்லை நகர் செக்போஸ்ட் வழியாக மருதமலைக்கு வரும் அனைத்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து அரசு, தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளும் வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு சந்திப்பில் இடது புறம் திரும்பி மகாராணி அவென்யூ, சின்மயா வித்யாலயா பள்ளி, அருண்நகர் வழியாக அஞ்சனூர் சந்திப்பில் வலது புறம் திரும்பி பொம்மன்னம்பாளையம் ரோடு வழியாக கல்வீரம்பாளையம் அடைந்து மருதமலை வரவேண்டும்.
போக்குவரத்து மாற்றம்
தடாகம் ரோடு இடையார்பாளையம் சந்திப்பில் இருந்து வடவள்ளி ரவுண்டாணா வழியாக மருதமலை செல்லும் அனைத்து வாகனங்களும் வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி மேலே குறிப்பிட்டுள்ள கல்வீரம்பாளையம் சந்திப்பு வழியாக மருதமலை செல்ல வேண்டும்.
தடாகம் ரோடு கணுவாய், ஆசிரியர் காலனி, காளப்பநாயக்கன்பாளையம் வழியாக நவாவூர் பிரிவு வரும் அனைத்து வாகனங்களும் இடையார்பாளையம் சாலை வழியாக வடவள்ளி ரவுண்டாணா வந்தடைந்து தொண்டாமுத்தூர் ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி மேலே குறிப்பிட்டுள்ள கல்வீரம்பாளையம் சந்திப்பு வழிய மருதமலை செல்ல வேண்டும்.

சிறுவாணி ரோடு தொண்டாமுத்தூரில் இருந்து கோவை நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் அஞ்சனூர் சந்திப்பு பொம்மன்னம்பாளையம் சந்திப்பில் வலது புறம் திரும்பி வேடப்பட்டி, பூசாரிபாளையம் ரோடு வழியாக தடாகம் ரோட்டை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
மருதமலை அடிவாரத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கல்வீரம்பாளையம் சந்திப்பு, நவாவூர்பிரிவு, வடவள்ளி ரவுண்டாணா வந்தடைந்து வழக்கமான வழித்தடத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
தடாகம் ரோடு லாலி ரோடு சந்திப்பு வழியாகவும், இடையர்பாளையம் ரோடு, வடவள்ளி ரவுண்டாணா வழியாகவும், தொண்டாமுத்தூர் ரோடு வழியாகவும் இலகுரக மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் நாளை (31ம் தேதி) காலை 6 மணி முதல் 2ம் தேதி இரவு 10 மணி வரை மருதமலை, வடவள்ளி சாலையில் செல்வதற்கு தடை செய்யப்படுகிறது.
எனவே, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் போக்குவரத்திற்கும், பாதையாத்திரையாக வரும் பக்தர்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாமல் போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு தந்து உதவ வேண்டும்.
பேருந்துகளுக்கும் கட்டுப்பாடு
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பாதையாத்திரை வரும் பக்தர்கள் எளிதாக சென்று சுவாமி தரிசனம் செய்து வரவும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மருமதமலை மலைமேல் செல்ல அனுமதி இல்லை.
பக்தர்கள் தங்களது வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு தேவஸ்தான பேருந்து மூலமாகவும் மற்றும் மலைக்கோயில் படிக்கட்டு வழியாகவும் கோயிலுக்கு சென்று வரலாம்.
மேலும், கோவை மாநகரத்தில் இருந்து மருதமலை செல்லும் அனைத்து அரசு, தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளும் பாரதியார் பல்கலைகழகம் கேட் 2 வழியாக உள்ளே சென்று தொலைமுறை கல்விக்கூட வளாகம் முன்பு பயணிகளை இறக்கிவிட்டு, பின்னர் மீண்டும் அங்கிருந்து பயணிகளை ஏற்றிகொண்டு கோவை மாநகருக்குள் வர வேண்டும்.
தற்காலிக வாகன நிறுத்தம்
மருதமலைக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் அனைத்து பக்தர்களும் தங்களது வாகனங்களை பாரதியார் பல்கலைகழகம் குடியிருப்பு வளாக பகுதி பார்க்கிங் (கார்), பாரதியார் பல்கலைகழகம் தொலைமுறை கல்விக்கூடம் கேட் 2 பார்க்கிங் (அரசு, தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகள்), அரசு சட்டக்கல்லூரி மைதானம் (கார்),
பொதிகை பிள்ளர் பார்க்கிங் (கார்), பொதிகை ஆர்ச் பார்க்கிங் (பாஸ், கட்டளைத்தாரர்கள்), சிடிசி பஸ் நிலையம் பின்புறம் (இருசக்கர வாகனம்) தைலக்காடு 7 (இருசக்கர வாகனம்) மற்றும் 8 (கார்) பார்க்கிங், இந்திரா நகர் பார்க்கிங் (கார்), குமரன் ஹால் பார்க்கிங் (கார்), வள்ளியம்மை கோயில் பார்க்கிங் (கார்) ஆகிய இடங்களில் நிறுத்திவிட்டு கோயிலுக்கு சென்று வரலாம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

