கோவை: ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் உடனடியாக மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் தபாலில் மனு அனுப்பி கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை ஒண்டிப்புதூர் பகுதிக்குட்பட்ட ரயில்வே கடவு எண். 3-ல் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, ஒண்டிப்புதூர் சிவலிங்கபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பகுதி பொதுமக்கள் சார்பாக தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பி மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை ஒண்டிப்புதூர் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன் தலைமையில், சிவலிங்கபுரம் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் எஸ். சுப்பிரமணியன் ஆகியோரின் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒண்டிப்புதூர் தபால் நிலையத்தில் ஒன்றுகூடினர்.
தற்போதைய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பாலம் கட்டுவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, முதலமைச்சருக்கு கோரிக்கை தபால்களை அனுப்பினர்.
பொதுமக்களின் நலன், போக்குவரத்து நெரிசலுக்கான நிரந்தரத் தீர்வு மற்றும் நகரின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் அமைக்க மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என ஒண்டிப்புதூர் சிவலிங்கபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பகுதி பொதுமக்கள் சார்பாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




