கோவை: கோவையில் இயற்கை வேளாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கான சுற்றுலா நடத்தப்பட்டது.
கோவை மாவட்டம் மதுக்கரை வட்டாரம் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வி துறையுடன் இணைந்து இயற்கை வேளாண்மை குறித்த மாணவர்களுக்கான கல்வி சுற்றுலா நம்மாழ்வார் அங்கக வேளாண்மை மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.

வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் சுகந்தி நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் சிறப்புகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பின்னர் முனைவர் ராமசுப்பிரமணியன், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் பூசப்பட்ட மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்துதல் கூடாது என மாணவர்களிடம் கூறினார்.
மேலும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை பண்ணை கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்ய வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. செயற்கை உரங்கள் குறித்தும் இயற்கை உரங்களை பயன்படுத்துதல் மற்றும் தேனீ வளர்ப்பு மீன் வளர்ப்பு காளான் வளர்ப்பு ஐந்திலை கரைசல் மற்றும் 3ஜி கரைசலை பயன்படுத்தி பூச்சி மருந்துகளை கட்டுப்படுத்துதல் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

இயற்கை விவசாய பண்ணையில் காய்கறி சாகுபடி வயல் போன்றவற்றை மாணவர்களுக்கு காண்பித்தனர்.
இந்த கல்வி சுற்றுலாவில் அரசு மேல்நிலைப் பள்ளி மதுக்கரை, ஒத்தக்கால்மண்டபம், மலுமிச்சம்பட்டி, செடிப்பாளையம், பிச்சனூர் , வெள்ளலூர் பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
இந்த பட்டறிவு சுற்றுலாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்செல்வி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) நிர்மலா மற்றும் மதுக்கரை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுதா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.




