கோவையில் இந்திய ஜவுளி சங்கத்தின் அகில இந்திய மாநாடு நடைபெற உள்ளது…

கோவை: கோவையில் இந்திய ஜவுளிச் சங்கத்தின் தென்னிந்திய பிரிவு சார்பில் 78வது அகில இந்திய ஜவுளி மாநாடு நடைபெற உள்ளது.

இந்திய ஜவுளிச் சங்கத்தின் தென்னிந்திய பிரிவு சார்பில் 78வது அகில இந்திய ஜவுளி மாநாடு, கோயம்புத்தூர் லீ மெரிடியன் ஹோட்டலில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.

இது குறித்து கோயம்புத்தூர் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்த மாநாட்டுக் குழுத் தலைவர் மற்றும் சி.ஐ.டி.ஐ-யின் முன்னாள் தலைவர் ராஜ்குமார், இந்திய ஜவுளிச் சங்கத்தின் தென்னிந்திய பிரிவு தலைவர் சத்தியநாராயணா, மாநாட்டு அமைப்பாளர் ராமலிங்கம், மற்றும் இந்திய ஜவுளிச் சங்கத்தின் கோவை செயலாளர் சிவகுமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த மாநாடு நவம்பர் 21 மற்றும் 22, 2025 ஆகிய இரண்டு நாட்கள், அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ஸ் அண்ட் கலரிஸ்ட்ஸ் (AATCC) உடன் இணைந்து, ‘உலகளாவிய ஜவுளி: வாய்ப்புகளைத் தோண்டி எடுத்தல்’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில், ஆடைகள் மற்றும் ஜவுளி நுகர்வில் வளர்ந்து வரும் உலகளாவிய போக்குகள்; செலவு, கழிவு மேலாண்மை மற்றும் ஆற்றல் திறன் ஆகியவற்றிற்கான தொழில்நுட்பப் போக்குகள்; மேம்பட்ட உற்பத்தி முறைகள் மூலம் ஜவுளி ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள்; பொருளாதாரம், வரிவிதிப்புக் கொள்கைகள் மற்றும் புதிய உற்பத்தி இடங்களின் சாத்தியக்கூறுகள்; ஜவுளித் துறையில் தகவல் தொழில்நுட்பம். ஆட்டோமேஷன்/ரோபோட்டிக்ஸ் ஆகியவற்றின் தாக்கம்; சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகள் போன்ற முக்கியமான தலைப்புகள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற பேச்சாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்களின் சிறப்புரைகள் மற்றும் குழு விவாதங்கள் மூலம் இந்தத் தலைப்புகள் ஆராயப்படும் என்றனர்.

மாநாட்டின் தலைமை விருந்தினராக எல்.எம்.டபிள்யூ-வின் (LMW) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வில் பல்லவா குழுமத்தின் செயல் இயக்குநர் துரை பழனிசாமி மற்றும் எல்.எஸ். மில்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எல்.எஸ்.மணிவண்ணன் ஆகியோருக்கு இண்டஸ்ட்ரியல் எக்சலன்ஸ் விருது வழங்கப்படவுள்ளது என்றனர்.

இந்த மாநாட்டில் இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 600 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றனர். அனைத்து முன்னணி இயந்திர உற்பத்தியாளர்கள், உபகரண வழங்குநர்கள், மற்றும் முன்னணி தொழிலதிபர்கள் ஆகியோர் இந்தத் தொழில் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகளைப் பற்றி விவாதிக்க உள்ளனர் என்று கூறினர்..

Recent News

Video

கோவையில் முட்டிக்கொண்ட காட்டு யானைகள்- சிசிடிவி காட்சிகள்

கோவை: கோவை தடாகம் பகுதியில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டத்தில் இரண்டு யானைகள் முட்டி மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான...
Join WhatsApp