கோவை: கோவையில் மலைவாழ் மக்களுடன் படத்தை பார்த்த கெவி படக்குழுவினர்- படத்தை பார்த்து நெகிழ்ச்சியடைந்த மலைவாழ் மக்கள்.
மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இயக்குனர் தமிழ் தயாளன் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் ஷீலா ராஜ்குமார், ஆதவன், ஜீவா சுப்ரமணியம் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கெவி திரைப்படம் தமிழக முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை ஆனைகட்டி பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் மலைவாழ் மக்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சியை ஆனைகட்டி, கண்டிவழி, ஆலமரமேடு உள்ளிட்ட மலைபகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் நூற்றுக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். அவர்களுடன் திரைப்பட குழுவினரான இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகளும் பார்த்து ரசித்தனர்.

திரைப்படத்தைப் பார்த்த மலைவாழ் மக்கள் அனைவரும் எங்கள் வாழ்வில் நாங்கள் சந்திக்கும் சிரமங்களை பார்ப்பது போல் இருப்பதாக திரைப்பட குழுவினரை நெகிழ்ச்சியுடன் பாராட்டினர். அதிலும் ஒரு பாட்டி நடிகை ஷீலா ராஜ்குமாரை பாராட்டி ஆசீர்வாதம் செய்தது நெகிழ்வை ஏற்படுத்தியது.
இது குறித்து பேசிய பட குழுவினர் இந்த படம் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை எடுத்து கூறுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது மலைவாழ் மக்கள் உடனே படத்தை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய இயக்குநர் சாதாரண மனிதனுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படை தேவை என்பது கண்டிப்பாக சேர வேண்டும் அதற்காகத்தான் தனக்கு தெரிந்த வழியில் போராடுவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகை ஷீலா ராஜ்குமார், மலைவாழ் மக்களுடன் இந்த படத்தை பார்க்கும் பொழுது அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிவதாக தெரிவித்தார். அடிப்படை மனிதனின் தேவையான குரலாக தான் இந்த படத்தை பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ரியோ உடன் ஒரு திரைப்படம் முடித்திருப்பதாகவும் நயன்தாராவுடன் மண்ணாங்கட்டி திரைப்படம் செய்திருப்பதாகவும் தெலுங்குவிலும் ஒரு திரைப்படம் முடித்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்த திரைப்படம் எடுக்கும் பொழுது ஒன்பது கிலோமீட்டர் மலைப்பகுதியை கடந்து தான் அந்த கிராமத்திற்கு செல்ல வேண்டி இருந்ததாகவும் டென்ட் கொட்டகைகளில் தான் தங்கி இருந்து இந்த படத்தில் நடித்திருந்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகர் ஆதவன், தான் ஒரு ஆட்டோ டிரைவர் என்றும் பல்வேறு கஷ்டங்களை கடந்து இந்த திரைப்படத்தை தற்பொழுது எங்கள் குழு எடுத்துள்ளதாக தெரிவித்தார். மலைவாழ் மக்களுடன் தற்பொழுது பார்த்தது தான் முழு படத்தை முதல் முறையாக நான் பார்த்தது என குறிப்பிட்டார்.