Header Top Ad
Header Top Ad

அவினாசி சாலை மேம்பாலம்… புதிய பெயரை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

கோவை: அவினாசி சாலை மேம்பாலம் நாளை மறுநாள் திறக்கப்பட உள்ள நிலையில், புதிய பெயர் சூட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அவினாசி சாலை மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது.

மொத்தம் ரூ.1,791 கோடி செலவில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.10 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும் இந்த மேம்பாலம் தமிழகத்தின் நீளமான மேம்பாலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

சுமார் 17.5 மீட்டர் அகலத்தில் 4 வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தில், ஏறி இறங்கும் தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கு நடைபெறுவதால் ரெசிடன்சி அருகே உள்ள ஏறு தளம் மட்டும் இன்னும் முடிவுறவில்லை. மற்றபடி அவினாசி சாலை மேம்பாலத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

Advertisement

தொடர்ந்து மேம்பாலத்தை இம்மாதம் 9ம் தேதி முதலமைச்சர் திறந்து வைப்பார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் பின்னர், அமைச்சர்கள், அதிகாரிகள் படு வேகமாக செயல்படத் தொடங்கினர். பாலத்தில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது திறப்பு விழாவிற்குத் தயாராக உள்ளது.

இதனிடையே அவினாசி சாலை மேம்பாலத்திற்குக் கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜிடி நாயுடு பெயரைச் சூட்டுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2020-இல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவினாசி சாலை மேம்பாலம், நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.

கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.

கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜிடி நாயுடு பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன்.

என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Recent News