கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கில் அதிகாலையில் ஏற்பட்ட தீயை சுமார் 2 மணி நேரம் போராடி அணைத்தனர்.
கோவை வெள்ளலூரில் உள்ள குப்பைக்கிடங்கில், மாநகரில் தினமும் சேகரமாகும் 1,100 டன் குப்பை கொட்டப்படுகிறது. இங்கு வெயிலின் தாக்கம் மற்றும் சில சமூகவிரோதிகளின் செயல்களால் அடிக்கடி குப்பை தீப்பற்றி எரிகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்தது. இதனால் அந்தப் பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது.
இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையங்களுக்கும், மாநகராட்சி துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
அதன் பேரில், கோவை தெற்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன.
சுமார் 20க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து குப்பையில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். கிட்டத்தட்ட 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், கடந்த 16ம் தேதி இரவில் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.