கோவை: சரவணம்பட்டியில் தனியார் நிறுவனத்தில் 58 தங்க நாணயங்கள் திருடு போனது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கீரணத்தம் ரோட்டில் உள்ள ஐ.டி. பார்க்கில் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு மொத்தமாக பொருட்கள் வைக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.
இதை கணபதி ராமகிருஷ்ணாபுரம் அருகே உள்ள ராஜாஜி நகரை சேர்ந்த பாலாஜி (வயது 35) என்பவர் நடத்தி வருகிறார். இங்கு உள்ள பொருட்களை அடிக்கடி இருப்பு கணக்குசரி பார்ப்பது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு இருந்த 58 தங்க நாணயங்கள் திடீரென்று திருட்டுப் போனது. இதுகுறித்து மேலாளர், பாலாஜிக்கு தகவல் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அப்போது அங்கு அடிக்கடி ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடமாக வந்து சென்றது கேமராவில் தெரியவந்தது.
உடனே அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதைத் தொடர்ந்து பாலாஜி சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தங்க நாணயங்கள் திருட்டுப் போனது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


