கோவை: இலவச பார்க்கிங்குக்கு ரூ.500க்கு பொருட்கள் வாங்க வலியுறுத்திய கடை நிர்வாகம் வாடிக்கையாளருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் கவுரி. இவர் தனது நண்பர்களுடன் கடந்த பிப்ரவரி 17ம் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு கடைக்குச் சென்றுள்ளார். அந்த கடையின் பார்க்கிங்கில் தனது காரை நிறுத்தி சென்றார்.
பின்னர் கடையில் ரூ.240க்கு ஜூஸ் குடித்து வெளியே வந்தார். அப்போது காரை பார்க்கிங்கில் இருந்து எந்த கட்டணமும் இல்லாமல் வெளியே எடுக்க பில்லில் காசாளரிடம் சீல் வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து கவுரி பில்லைக் கொடுத்தார். பில்லை பார்த்த கடை நிர்வாகம் கடையின் பார்க்கிங்கை இலவசமாக பயன்படுத்த ரூ.500க்கு மேல் பொருட்கள் வாங்கி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் கவுரி கடை நிர்வாகத்திடம் பார்க்கிங் கட்டணத்தை செலுத்துவதாகக் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்துள்ளனர். இதை தொடர்ந்து கவுரி வேறு வழியில்லாமல், ரூ. 538க்கு கூடுதலாக பொருட்களை வாங்கி உள்ளார்.
அபராதம்
அதன் பின்னர் பார்க்கிங்கில் பில்லைக் காட்டி காரை வெளியே எடுத்து வந்தார். இதுகுறித்து கவுரி மாவட்ட நுகர்வோர் தீர்வு மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கவுரிக்கு மன வேதனை ஏற்படுத்தியதற்காக இழப்பீடாக ரூ.30 ஆயிரம் மற்றும் நீதிமன்றம் வழக்குச் செலவாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.40 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.


 
                                    
