கோவை: ரேசன்கடைகளில் நாளை கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 95.82 சதவீதமும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் 88.65 சதவீதமும் கைவிரல் ரேகை பதிவு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி மேற்படி கைவிரல் ரேகை eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் 02.08.2026 அன்று சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதால் குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்களில் கைரேகை பதிவு விடுப்பட்டுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைக்கோ அல்லது அருகிலுள்ள நியாய விலைக்கடைக்கோ சென்று கைவிரல்ரேகை பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி கோயம்புத்தூர் மாவட்டத்தில் 100% eKYC பணியினை நிறைவு செய்ய உறுதுணை செய்யுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.





