கோவை: பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமை அலுவலரின் அறிவிப்பின்படி, 01.01.2000-க்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில் பெயர் இல்லாமல் உள்ளவர்கள், தங்களின் பெயரைச் சேர்த்துக் கொள்வதற்கான இறுதித் தேதி 26.09.2026 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகளின்படி 01.01.2000-க்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில் பெயர் இல்லாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தங்களின் பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள், ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நிகழ்ந்த பிறப்புகளுக்கு அப்பகுதிகளில் உள்ள தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகங்களிலும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நிகழ்ந்த பிறப்புகளுக்கு சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் விண்ணப்பித்து 26.09.2026-க்குள் பெயரைச் சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த வாய்ப்பைத் தவறவிடாமல், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பெயர் சேர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்குக் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.




