கோவை: இந்தியாவில் வெற்றிகரமாக தேர்தல் நடத்தி முடிப்பது பல்வேறு சவால்கள் நிறைந்த பணி என இந்திய தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா விஸ்வ வித்யாதீபம் பல்கலைக்கழகத்தின் 30வது பட்டமளிப்பு விழா, கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஞானேஷ் குமார், நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
அமிர்தா பல்கலைக் கழக முதல்வர், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் இதில் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில், முனைவர் பட்டம் பெற்ற 120 பேர் சிறப்பு விருந்தினர்களிடமிருந்து நேரடியாக பட்டங்களை பெற்றனர். பொறியியல், கலை அறிவியல் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 2197 பேர் இதில் பட்டங்களை பெற்றனர்.
இந்நிகழ்வில் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் சுப்பிரமணியம் பேசுகையில், இளைஞர்கள் தொழில் முனைவராக மாற வேண்டும் எனவும் நிதி மேலாண்மை மட்டுமின்றி தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் சிறந்த வகையில் தீர்வு காண்பவர்களாக உருவாக வேண்டும் எனவும்,
பிறருக்காக வாழ்வதே வாழ்வின் உண்மையான கொண்டாட்டம் எனும் விவேகானந்தரின் பொன்மொழிகளை இளைஞர்கள் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், இந்தியாவின் எதிர்காலமாக இளைஞர்கள் விளங்குவதாகவும், இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான அமிர்தா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் படித்து பட்டம் பெறுவதை பெருமையாக கருத வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் பேசியவர், வாழ்வில் எங்கு சென்றாலும் என்ன வேலை செய்தாலும் தேசத்தின் வளர்ச்சிக்காக செய்ய வேண்டும் எனவும், உலக அளவில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்வதாகவும், இந்தியாவில் வெற்றிகரமாக தேர்தல் நடத்தி முடிப்பது பல்வேறு சவால்கள் நிறைந்த பணி என தெரிவித்தார்.
குறிப்பாக, எஸ் ஐ ஆர் – வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தப் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டதாகவும், அமெரிக்கா நாட்டில் எஸ் ஐ ஆர் போன்ற பணிகள் துவங்கப்பட்டு அமலுக்கு வராமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் தேர்தல் பணிகள் சிறந்த வெளிப்படை தன்மையோடும் வாக்காளர்களின் ஆதரவோடும் சிறப்பாக நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டவர், தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிகபட்சமாக 86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இதற்கு மாநில தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.
நாட்டின் ஜனநாயகத்தில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றி வருவதாகவும், அவர்களுக்கான கல்வி அறிவுக்கு இது போன்ற பல்கலைக்கழகங்களில் அடித்தளம் இடப்படுவதாகவும், அதே நேரத்தில் அவர்களது மன நலனையும் பாதுகாத்து சிறந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.





