கோவை: கோவையின் கெளசிகா நதி சாலையூர் தடுப்பணை புனரமைப்புப்பணிகள் துவங்கி உள்ளது.
கோவை அடையாளமாக திகழும் கௌசிகா நதியானது மிகவும் வறண்ட நிலையில் காணப்படும் நிலையில் தமிழக அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் அவிநாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செரிவூட்டும் திட்டத்தில் பயன்பெறும் வகையில் குளங்கள் மட்டுமல்லாமல் கௌசிகா நதியில் உள்ள 15 தடுப்பணைகளுக்கு ஓ.எம்.எஸ் குழாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக கோவில்பாளையம் பகுதி கெளசிகா நதி உட்பட வையம்பாளையம் கெளசிகா நதி தடுப்பணை, தேவம்பாளையம் தடுப்பணை ஏற்கனவே கெளசிகா நீர்கரங்கள் மூலமாகவும் ரோட்டரி அமைப்புகள் மற்றும் சி.எஸ்.ஆர் உட்பட பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் நிதிப்பங்களிப்புடன் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இதே பகுதியை அடுத்துள்ள அன்னூர் வட்டத்திற்கு உட்பட்டு, வருவாய் துறையினரின் கட்டுப்பாட்டில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள கெளசிகா நதி சாலையூர் தடுப்பணை மிகவும் தூர்ந்துபோன நிலையில் மானாவாரியாக உள்ள இப்பகுதிகளுக்கு பெரும் பயன் அளிக்கும் வகையில் அவிநாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செரிவூட்டும் திட்டத்தின் மூலம் 5.9 எம்.சி.எப்.டி கொள்ளளவு நீர் உட்பட மழைகாலங்களில் கிடைக்கும் நன்னீரை இந்த தடுப்பனையில் சேமிக்கும்படி புனரமைப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். அவர் பேசுகையில் கோவை மாவட்ட அளவில் நீர்நிலைகள் சீரமைப்பிற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் மேலும் தன்னார்வ அமைப்புகள் மூலம் நீர்நிலை சீரமைப்பு மேற்கொள்ள தகுந்த அனுமதி அளித்து பணிகளை மேற்கொள்ள உடனடியாக வழிவகை செய்து வருகிறது என்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இதற்கு நல்ல ஒத்துழைப்பும் வழங்கி வருகிறது எனவும் மற்ற மாவட்டங்களை விடவும் கோவையில் தன்னார்வ அமைப்புகள் சிறப்பாக செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில் முன்னிலை வகித்த ரோட்டரி அமைப்பின் தலைவர் குகன், பொதுவாக ரோட்டரி அமைப்புகள் மூலமாக பல ஆண்டுகளாக கல்வியை நோக்கி அதிகம் கவனத்தை செலுத்தி வந்த வேலையில் வறட்சியான கோவை வடக்கு பகுதிகளில் வறண்டு போன கெளசிகா நதியை மீட்டெடுப்பதன் முக்கியத்துவம் உணர்ந்தும் கௌசிகா நீர்கரங்கள் அமைப்பு மூலமாக கைவிடப்பட்ட பல நீர் நிலைகள் சீரமைக்கப்படுவதை அறிந்தும் கௌசிகா நதி தொடர்ந்து சீரமைக்கப்பட ரோட்டரி கிளப் ஆர்வமாக உள்ளது எனவும் அந்த அடிப்படையில் தான் இந்த நதி சீரமைப்பிற்கு ரோட்டரியின் பல்வேறு கிளப்புகள் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக நிதிப்பங்களிப்பு வழங்கி துணை நிற்கிறது என தெரிவித்தார்.
மேலும், இந்த தடுப்பணை சீரமைப்பின் மூலம் சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் பகுதிகளில் 1000 அடிக்கு கீழே உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர், கால்நடை, விவசாயம் உட்பட தொழில் தேவைகளுக்கு மிகுந்த பயன் அளிக்கும் என கௌசிகா நீர்கரங்கள் நிர்வாக அறங்காவலர் செல்வராஜ் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் தடுப்பணையை சுற்றியுள்ள பொதுமக்கள், விவசாயிகள், பயனாளர்கள் கௌசிகா நீர்கரங்களின் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.





