கோவை: ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு பேரூர் படித்துறையில் வழிபாடு நடத்துவதற்கு குவிந்த மக்கள் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் நீர்நிலைகளுக்கு வருகை புரிந்து நீர்நிலைகளுக்கு வழிபாடு செய்வர். நீர்நிலைகள் என்றும் வற்றாமல் இருக்க வேண்டும் என்றும் விவசாயம் செழிக்க வேண்டும் என்றும் வழிபாடு நடத்தப்படும்.
நீர் நிலைகளில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து கனிகள், பலகாரங்களை வைத்து ஊர் செழிக்கவும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென்றும் வழிபாடு நடத்தப்படும். அதே சமயம் புதுமண தம்பதிகள் மாங்கல்யத்தை மாற்றிக் கொள்வார்கள். பல்வேறு மக்களும் சொந்த பந்தங்களுடன் ஆற்றங்கரைகளில் ஒன்று கூடி ஆடிப்பெருக்கு நாளை கழிப்பர்.

இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளான இன்றும் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆற்றங்கரைகளில் ஒன்று கூடி ஆடிப்பெருக்கு வழிபட்டு வருகின்றனர் பல்வேறு பகுதிகளில் புதுமண தம்பதிகள் மாங்கல்யத்தை மாற்றி வழிபாடு மேற்கொள்கின்றனர்.
கோவையைப் பொறுத்தவரை பேரூர் படித்துறை ஆடிப்பெருக்கு நாளில் பொதுமக்கள் ஒன்று கூடி வழிபடும் முக்கிய இடமாக திகழ்ந்து வருகிறது. அதன்படி அதிகாலை முதலே பொதுமக்கள் ஏராளமானோர் பேரூர் படித்துறைக்கு வருகை புரிந்து வழிபாடு நடத்தி வருகின்றன. ஆனால் பேரூர் படித்துறையில் தண்ணீர் இல்லாததால் அங்கு வருகை புரிந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இருப்பினும் கோவில் நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் தற்காலிகமாக பைப்பில் ட்யூப் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்ட உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் ட்யூபில் வரும் நீரை கொண்டு வழிபாடு செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வருவதால் அங்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு கூட்டத்தை சீர் செய்து வருகின்றனர். அதே சமயம் காவல்துறை சார்பில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகளும் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது.





