கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக உயிரி எரிபொருள் தினம் கொண்டாடப்பட்டது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதுப்பிக்கவல்ல ஆற்றல் பொறியியல் துறை சார்பில் உலக உயிரி எரிபொருள் தினம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் பங்கேற்புடன் கொண்டாடப்பட்டது.
புதுப்பிக்கவல்ல ஆற்றல் பொறியியல் துறைப் பேராசிரியர் முனைவர் பழனிசெல்வம் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அத்துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார். அதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் உயிரி எரிபொருட்களின் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தினார். கோயம்புத்தூர், வேளாண் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ராஜ்குமார் விழாவிற்கு தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ராஜ்குமார், “3G உயிரி எரிபொருட்கள் போக்குகள் மற்றும் எதிர்கால வழிமுறைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். குறிப்பாக பாசி மற்றும் பிற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் 3G உயிரி எரிபொருட்கள், ஒரு சிறந்த தூய-ஆற்றல் தேர்வாக உருவெடுத்து வருவதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, மூன்றாம் ஆண்டு பி.டெக் (EEE/AGE) மாணவர்களால் தயாரிக்கப்பட்ட உயிரி எரிபொருளைக் கொண்டு விளக்குகள் ஏற்றப்பட்டது. இது தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதில் இளைய தலைமுறையினரின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான புதுப்பிக்கவல்ல ஆற்றல் ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமூக ஈடுபாட்டை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை இந்நிகழ்ச்சி பிரதிபலித்தது.





