கோவை: கோவை விமான நிலையத்தில் யாத்ரி சேவா அபியான் விழிப்புணர்வு இயக்கம் தொடங்கியது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், சேவைத் தரம், பாதுகாப்பு மற்றும் தூய்மையை மேம்படுத்தும் நோக்கில் ‘யாத்ரி சேவா அபியான் 2026’ என்ற 24 நாட்கள் சிறப்பு விழிப்புணர்வு இயக்கம் தொடங்கியது. வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வரை இந்த இயக்கம் நடைபெறுகிறது.
விமான நிலைய இயக்குநர் முகமது ஆரிப் இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடக்க நாளையொட்டி வந்தே மாதரம் பாடல், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள், பயணிகள் உதவி மையங்கள் மற்றும் ‘செல்ஃபி’ எடுக்கும் அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
சேவை, தூய்மை, ஒத்துழைப்பு மற்றும் இன்முக சேவை ஆகியவற்றை மையமாகக் கொண்டு, ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதன்முறையாக விமானத்தில் பயணிப்பவர்களுக்கு சிறப்பு உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் டிஜியாத்ரா, வைஃபை உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகள், குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் பயணிகளின் குறைகளைத் தீர்க்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட உள்ளது.
இவ்வியக்கத்தின் ஒரு பகுதியாக, உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27 அன்று பயணிகளுக்காக உள்ளூர் கலாச்சார கலை நிகழ்ச்சிகளும், காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 அன்று விமான நிலைய வளாகம் முழுவதும் சிறப்பு தூய்மைப் பணியும் நடைபெற உள்ளன.





