கோவை: தனியார் பேருந்தால் வாகன ஓட்டி படுகாயம் அடைந்தார். பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை திருச்சி சாலையில் அதிகவேகமாகச் சென்ற பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில், வாகன ஓட்டி படுகாயம் அடைந்தார். தனியார் பேருந்துகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதிகாரிகள் இதனை கண்டுகொள்வதில்லை என்று கூறி பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநகரமாக கோவை மாநகரம் உள்ளது. இதனிடையே கோவையில் சில தனியார் பேருந்துகள் அதிகபட்ச ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்துவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் பேருந்துகளை இயக்கி விபத்துகளை ஏற்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இதனிடையே இன்று காலை கோவை -திருச்சி சாலையில் குளத்தேரி அருகே தனியார் பேருந்து ஒன்று அதி வேகத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அந்த பேருந்து மோதியதில், வாகன ஓட்டி நாகேந்திரன் என்பவர் படுகாயமடைந்தார்.
தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனிடையே தனியார் பேருந்துகள் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





