கோவை: கோவையில் நடைபெற்ற Rozgar Mela நிகழ்வில் 285 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் Rozgar Mela நிகழ்ச்சி நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோதி நேரலையில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 4 இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ரோஸ் கார் மேலா நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்ட வருமானவரித்துறை, தலைமை ஆணையர் சஞ்சீவ் சங்கர் முன்னிலையில் வருமான வரித்துறையினர் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்திருந்தனர்.
இதில் சிறப்ப விருந்தினராக மத்திய இணை அமைச்சர் பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெற்ற 25 பேருக்கு நேரடியாக பணி நியமன
ஆணைகளை வழங்கினார்.
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருமானவரித்துறை, ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தபால் துறை, இ எஸ் ஐ கார்ப்பரேஷன் மற்றும் ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு பெற்ற 192 பேருக்கு மேடையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
93 பேர் மெயில் மூலம் பணி ஆணைகளை பெற்றுக் கொண்டனர். மொத்தம் 285 பேர் கோவையில் நடைபெற்ற நிகழ்வில் பணி நியமன ஆணைகள் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர், நாட்டின் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அரசு வேலைவாய்ப்பு மட்டுமின்றி தனியார் வேலை வாய்ப்பையும் ஊக்குவிப்பதோடு மகளிர்க்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் ரோஸ் கார் மேலா நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு ஆணைகளை பெற்றவர்கள், மக்களுக்கான சேவை செய்வதோடு வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுத்தத்தில் தங்களது திறமைகளை மேம்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.





