கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் மற்றும் மேலாண்மை செய்வது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் தலமையில் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்துதல் மற்றும் மேலாண்மை செய்வது குறித்த கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தலைமையில், நடைபெற்றது.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தாவது, கோயம்புத்தூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன்படி தங்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களிலிருந்து பெறப்படும் கழிவுகளை 4 வகையாக பிரித்து வழங்குதல் வேண்டும். அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தினசரி 100 கிலோவிற்கு மேல் கழிவுகளை உருவாக்குபவர்கள், 40,000 லிட்டர் தண்ணீரை பயன்படுத்துபவர்கள் மற்றும் 20,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அனைவரும் மொத்த குப்பை உற்பத்தியாளர்களாக கருதப்படுவர்.
இவர்கள் அனைவரும் தங்கள் நிறுவனத்திலிருந்து கழிவுகளை மக்கும் குப்பையை தனியாக பிரித்து தங்கள் வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை செய்ய வேண்டும் எனவும் காய்கறி கழிவுகள், தேங்காய் மூடி இறைச்சி கழிவுகள், மீதமான உணவுகள் உள்ளிட்ட ஈரக்கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் கவர்கள் உள்ளிட்ட உலர்கழிவுகள் சானிடரி நாப்கின்கள் உள்ளிட்ட சுகாதார கழிவுகள் மற்றும் வீட்டில் உற்பத்தியாகும் பேட்டரி, பல்பு உள்ளிட்ட சிறப்பு கழிவுகளை மாநகராட்சியிலோ அல்லது மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலோ வழங்கிட வேண்டும்.
மேலும், மாநகராட்சி பகுதியில் செயல்படும் மொத்த கழிவு உற்பத்தியாளர்கள் புதிய திடக்கழிவு மேலாண்மை விதி 2026யினை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் மாநகராட்சியில் செயல்படும் திடக்கழிவு மேலாண்மை நுண் உரமாக்கல் மையங்கள் மற்றும் உலர் கழிவு சேகரிக்கும் மையங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் எனவும் மொத்த கழிவுகள் உற்பத்தியாளர்களிடமிருந்து திடக்கழிவுகளை பெற்று உரிய மேலாண்மை மேற்கொள்ள தகுதி வாய்ந்த திடக்கழிவு மேலாண்மை நிறுவனங்கள் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற வேண்டும்
விண்ணப்பதாரர்கள் தங்கள் நிறுவனத்தின் மூலம் திடக்கழிவு மேலாண்மை செய்வதற்கு தேவையான வசதிகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், மொத்த கழிவு உற்பத்தியாளர்கள் அனைவரும் புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி மாசுகட்டுப்பாட்டு வாரிய வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள படியால் அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள் கல்வி நிறுவனங்கள், உணவகங்கள். தங்கும் விடுதிகள் போன்ற மொத்த கழிவு உற்பத்தியாளர்கள் தவறாமல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள வலைதளத்தில் பதிவு செய்திட வேண்டும்
தங்களது வளாகத்தில் செயல்படுத்த போதிய வசதிகள் இல்லை எனில் மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை நிறுவனங்களிடம் மட்டுமே வழங்கிட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





