கோவை: கோவையில் சிறுவர்களைப் பயன்படுத்தி பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை செல்வபுரம் பகுதியில் சிலர் சிறுவர்களை வைத்து பிச்சை எடுக்க வைப்பதாக மாவட்ட குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சூர்யமணி (25) என்பவர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த சிறுவர்கள் பேனா விற்பது போல நடித்து, பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வந்தது தெரியவந்தது.
விசாரணையில், மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் பகுதியைச் சேர்ந்த நபூல்ஷா (23) மற்றும் அவரது சகோதரர் சபூல்ஷா (30) ஆகிய இருவரும், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்களைப் பயன்படுத்தி இவ்வாறு கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைத்தது உறுதியானது.
இதுகுறித்து சூர்யமணி செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சகோதரர்கள் நபூல்ஷா மற்றும் சபூல்ஷா ஆகிய இருவரையும் கைது செய்தார். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.




