கோவை: கோவையில் அனுமதியின்றி மரத்தை வெட்டி சாய்க்க முயன்ற நபருக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரத்தை அடுத்த சவுரிபாளையப் பிரிவு சண்முகா வீதியை சேர்ந்தவர் கனகராஜ்.
இவரது வணிகவளாகம் முன்பு சாலை ஓரத்தில் இருந்த அரச மரம் கட்டத்தை மறைப்பதாகவும், அதன் கிளை காய்ந்து அருகில் உள்ள மருத்துவமனை மீது சாய்ந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் கூறி கிளைகளை வெட்ட அனுமதி கோரி விண்ணப்பித்தார்.
Advertisement

தொடர்ந்து, வி.ஏ.ஓ மற்றும் ஆர்.ஐ ஆகியோர் நேரில் ஆய்வு செய்து ஆபத்தாக உள்ள கிளையை மட்டும் வெட்டி அகற்ற அனுமதி வழங்கலாம் என அறிக்கை சமர்ப்பித்தனர்.
உரிய வழிமுறையை பின்பற்றி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட ஆர்.ஐ மற்றும் வி.ஏ.ஓ முன்னிலையில் வெட்டி அகற்ற அனுமதி அளித்து மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையருக்கு தெற்கு தாசில்தார் முகமது சைபு உத்தரவிட்டார்.
மரக் கிளையை வெட்டும் முன்பும், வெற்றிய பின்பும் புகைப்படங்களை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், கோவை டவுன் நில வருவாய் ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால் இரவு நேரத்தில் அரசு அதிகாரிகள் இல்லாமல், பொதுமக்கள் உறங்கும் நேரத்தில் அந்த மரம் வெட்டப்பட்டது. மரம் முழுமையாக வெட்டப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நியூஸ் க்ளவுட்ஸ் வாசகர்கள் அதனை தடுத்து நிறுத்தி, நமக்கு தகவல் அளித்தனர். இந்த செய்தியை அனைத்து ஊடகங்களுக்கும் பகிர்ந்ததுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தோம். மேலும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
Advertisement

“இந்த விவகாரம் முழுமையாக விசாரணை செய்யப்படும். விதிமீறல்கள் இருந்தால் சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிப்பு வெளியாகும்” என்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நியுஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூரிடம் தெரிவித்தார்.
விசாரணையை தொடங்கிய அதிகாரிகள், நேரடி ஆய்வு செய்து தாசில்தாருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

அரசின் உத்தரவை மீறி அனுமதிக்கு மாறாக மரத்தை வெட்டி சாய்த்த குற்றம் நிரூபணமானதைத் தொடர்ந்து, கனகராஜுக்கு விதிமுறைப்படி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தாசில்தார் முகமது சைபு உத்தரவிட்டார்.
இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#savetree