கோவை: பாரதியார் பல்கலைக் கழகத்தில் விதிமுறைகள் மீறியதாக முன்னாள் பொறுப்பு பதிவாளர் ரூபா குணசீலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மருதமலை பகுதியில் பாரதியார் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 39 துறைகளில் முனைவர் பட்டம் உள்பட 54 முதுகலை படிப்புகள் உள்ளன. இந்த பல்கலைக் கழகத்தின் கீழ் 143 உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பாரதியார் பல்கலைக் கழகம் தேசிய மதிப்பீடு A++ கிரேடு அங்கீகாரம் பெற்றுள்ளது.
இப்பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலைப் பிரிவுகளில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பாரதியார் பல்கலை பதிவாளராக, பெரியார் பல்கலையின் இயற்பியல் துறையை சேர்ந்த ராஜவேல் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் முன்னாள் (பொறுப்பு) பதிவாளர் பொறுப்பில் இருந்த பொழுது ரூபா குணசீலன் விதிமுறைகளை மீறி செயல்பட்டது, பல்கலைக் கழக நிதிக்குழு மற்றும் சிண்டிகேட் ஒப்புதல் இன்றி பணிகளை மேற்கொண்டது. உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அதனை அடுத்து ரூபா குணசீலன் மீதான புகார்களை விசாரிக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.எம் ரவி உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பார்த்தசாரதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து ரூபா குணசீலனை பணியிடை நீக்கம் செய்து, பல்கலைக் கழக துணைவேந்தர் தேர்தல் குழு உறுப்பினர் மற்றும் பதிவாளர் ராஜவேல் நடவடிக்கை எடுத்து உள்ளார்.


