கோவை: குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல் ஆதரவின்றி தவித்த 11 வயது சிறுவனை மீட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர், அவனை வால்பாறையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்த்து கல்வி தொடர ஏற்பாடு செய்துள்ளனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே. ரெட்டி, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, குடும்பச் சூழ்நிலை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் சிரமப்பட்ட 11 வயது சிறுவனுக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அந்த சிறுவன், தனது பெற்றோருடன் வசித்து வந்ததுடன், அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக சிறுவனின் தந்தை, அவரது மனைவி மற்றும் மகனை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், சிறுவனின் தாயார் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மகனை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பி முறையாக கவனிக்க முடியாமல் அவர் சிரமப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகள் குறித்து Instagram மூலம் அறிந்த சிறுவனின் தாயார், தனது மகனின் கல்வி மற்றும் பாதுகாப்பிற்கு உதவி செய்யுமாறு அந்தப் பிரிவினரை அணுகியுள்ளார்.
தகவல் கிடைத்ததும், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அடங்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் சிறுவனின் குடும்பச் சூழ்நிலை மற்றும் தற்போதைய நிலை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
சிறுவனின் எதிர்கால கல்வி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வால்பாறையில் செயல்பட்டு வரும் உண்டு உறைவிடப் பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்த்து, அங்கு பாதுகாப்பான சூழலில் கல்வியைத் தொடர ஏற்பாடு செய்தனர்.
இதன் மூலம் ஆதரவின்றி கல்வியைத் தொடர முடியாமல் தவித்த சிறுவனுக்கு மீண்டும் பள்ளிக் கல்வியைத் தொடரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தனது மகனின் கல்வி மற்றும் பாதுகாப்பிற்கு உதவி செய்து, அவரை உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு சிறுவனின் தாயார் நன்றி தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின்போது வால்பாறை காவல் ஆய்வாளர் செல்வம் உடனிருந்தார்.
ஆதரவற்ற மற்றும் குடும்பச் சூழ்நிலையால் பாதிக்கப்படும் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலனை உறுதி செய்யும் வகையில் கோவை மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





