கோவை: தைப்பூசம் கடைசி நாளான இன்று நிலாச்சோறு படைத்து மக்கள் வழிப்பட்டனர்.
தைப்பூசம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் தைப்பூச முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது அதில் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாச் சென்றும் காவடி எடுத்தும் அலகு குத்தியும் சென்று முருகனை வழிபட்டனர்.
மேலும் திருக்கல்யாண நிகழ்வு தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பாக நடைபெற்றது. கோவையிலும் மருதமலை, அனுவாவி, காந்தி பார்க் பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவிலிலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வழிபட்டனர்.
தைப்பூசத்தின் கடைசி நாளான இன்று நிலாச்சோறு நிகழ்வை பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் கொண்டாடினர். அதன்படி கோவை கணபதி, மணியக்காரன் பாளையம் பகுதியில் முருகனுக்காக நிலா சோறு படைத்து வழிபடும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் அப்பகுதியில் உள்ள ஆண் பெண் குழந்தைகள் என அனைவரும் முருகனுக்கு உணவுப்படைத்து சுற்றி நின்று கும்மி அடித்து வழிபட்டனர். இதில் சிறப்பம்சமாக சிறுவனுக்கு முருகன் வேடம் அணிந்து கும்மியாடி வழிபாடு மேற்கொண்டனர்.

