கோவை: கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மரம் முறிந்து விழுந்து ஆட்டோ சேதமடைந்தது.
கோவை, டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இருந்த பழமையான மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்ததில், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ சேதமடைந்தது.
கோவை டவுன்ஹால் பகுதியில் மாநகராட்சி பிரதான அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகள் பழமையான மரங்கள் உள்ளன. இந்நிலையில், வளாகத்திற்குள் இருந்த பெரிய மரம் ஒன்றின் ராட்சதக் கிளைகள் திடீரென வேரோடு முறிந்து வெளியே சாலையில் விழுந்தது.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ ஒன்று, மரத்தின் அடியில் சிக்கி பலத்த சேதம் அடைந்தது. மரம் விழும் சத்தம் கேட்டு ஆட்டோ ஓட்டுநரும், அருகில் இருந்த பொதுமக்களும் உடனடியாகச் விலகி ஓடியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், மரம் அறுக்கும் எந்திரங்கள் மூலம் மரக்கிளைகளை வெட்டி அகற்றினர்.




