கோவை: சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் வீடியோ வைரலாகி வருகிறது.
NDA கூட்டணி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும், திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் சில முக்கிய தலைவர்களின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இன்று காலை சி.வி.சண்முகம் நடிகை நயன்தாரா குறித்து பேசியதும், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெண்களின் உடை குறித்து பேசியதும் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.
இந்நிலையில், கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் கோவை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுகவின் மாவட்ட செயலாளருமான அம்மன் அர்ஜுனன் பேசுகையில் குடும்பத்தலைவிகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை குறித்து குறிப்பிடும் போது திமுகவினர் ”மூக்குத்தி இருக்கிறதா? கம்மல் இருக்கிறதா? என்பது போல், விட்டால் புருஷன் இருக்கிறாரா? என கேள்வி எழுப்புவார்கள்” என்று அவர் பேசியுள்ளார்.
தற்போது அந்த வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகையை பெறும் பெண்களை சந்தேகிக்கும் வகையில் கேள்வி கேட்பார்கள் என்பதைப் போல் அம்மன் அர்ஜுனன் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

