கோவை: கோவை கோர்ட்டில் நிலுவையில் உள்ள 466 போக்சோ வழக்குகள் சாட்சிகள் விசாரணையால் தீர்ப்பு வழங்க தாமதமாகிறது.
கோவை மாவட்டத்தில் பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க காவல்துறை மற்றும் நீதித்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக போக்சோ சிறப்பு கோர்ட்டு செயல்படுகிறது.
கோவை சூலூரில் கடந்த மே மாதம் 21-ந்தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த மறுநாளே, கோவை மாவட்ட போலீசார் இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி (35), அவரது கூட்டாளி மோகன் (31) ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
குற்றம் நடந்த 18 நாட்களுக்குள், புலனாய்வாளர்கள், 104 அரசு தரப்பு சாட்சிகள், 215 ஆவணங்களின் ஆதரவுடன் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் போக்சோ சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதில் போலீசாரின் விரைவான நடவடிக்கை, அசைக்க முடியாத புலனாய்வுப் பணிகள் இருந்த போதிலும், இந்த வழக்கு முடங்கியுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் விசாரணை முடியவில்லை. மேலும், வழக்கை விசாரித்த நீதிபதி ஓய்வு மற்றும் அதை தொடர்ந்து நிர்வாக நடைமுறைகள் மற்றும் சாட்சிகள் விசாரணை உள்ளிட்ட காரணங்களால் தீர்ப்பு வழங்குவதில் தாமதம் ஆகி வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும், இந்த வழக்கில், இந்த மாதத்துக்குள் தீர்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற போக்சோ வழக்குகளின் தேக்கத்தை குறைக்க கோவை உட்பட 17 மாவட்டங்களில் பிரத்யேகமான கூடுதல் போக்சோ நீதிமன்றங்களை அமைக்க மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது. கோவையில் கூடுதலாக ஒரு போக்சோ நீதிமன்றம் அறிமுகப்படுத்தப்படுவது இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு கிடைக்க வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்சோ வழக்குகளில் சாட்சி விசாரணையில் கடைபிடிக்கும் வழிமுறைகள் மற்றும் தாமதம் ஆகியவை சட்ட நடவடிக்கைகளை தாமதப்படுத்துகிறது.
கோவை மாநகரம் முழுவதும் இந்த ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 128 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு 193 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
466-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் தற்போது கோர்ட்டில் விசாரணை நிலுவையில் உள்ளன. இதனுடன் மாவட்ட போலீசார் பதிவு செய்த 200 வழக்குகளும் உள்ளன. கோர்ட்டில் விசாரணை உள்ளிட்ட காரணங்களால் வழக்குகள் தேக்கம் அடைவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தீர்ப்புகளும் தள்ளிப்போகும் நிலை ஏற்படுகிறது.
இது குறித்து வக்கீல்கள் கூறியதாவது:
போக்சோ வழக்குகளில் கிட்டத்தட்ட 15 சாட்சி விசாரணைகள் இருக்கும். ஒவ்வொரு சாட்சியையும் விசாரிக்க சுமார் 20 நிமிடங்கள் ஆகும். எனவே, தோராயமாக, நிலுவையில் உள்ள 600 வழக்குகளுக்கு, ஏறத்தாழ 9 ஆயிரம் சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு சாட்சிக்கும் 20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் 3 ஆயிரம் மணிநேரம் ஆகும்.
வழக்கமாக சாட்சி விசாரணைகளுக்காக நீதி மன்றத்திற்கு தினமும் 4 முதல் 5 மணி நேரம் உள்ளது. விசாரணையை தவிர், நீதிமன்றம் பிற பணிகளையில் நீதிமன்ற காவல் மற்றும் பிற பணிகளையும் கையாள வேண்டும். எனவே கூடுதல் போக்சோ நீதிமன்றம் அமைக்கும் அறிவிப்பு வரவேற்புக்குரியது.
தற்போது நிலுவையில் உள்ள 466 வழக்குகளின் சுமையை மறுபகிர்வு செய்வதன் மூலம் புதிய சிறப்பு நீதிமன்றம் தினமும் விசாரணைகளை நடத்தவும், சாட்சி விசாரணைகளை விரைவுபடுத்தவும், மற்றும் வழக்கு நடவடிக்கைகளை நெறிப்படுத்தவும் உதவும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.





